எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவ மாணவிகளின் வாசிப்பு திறன் நன்றாக இருக்கிறது

asiriyarthagaval
0

 




எண்ணும், எழுத்தும் திட்டம் இலக்கை நோக்கி செல்கிறதா என்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா நோய் தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.

 

 கற்றல் இடைவெளி தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 

 

கல்வியைப் பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் ஆரம்பக்கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித் திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. 

 

பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படை கூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனதுதான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பைப் படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள்.

 

இதனால் ஏற்பட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாகப் பெறவில்லை. எண்ணும் எழுத்தும் திட்டம் இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது. 

 

அதற்காக உருவானதுதான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

 

 அதன் பிறகு அந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது. அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

அரும்பு, மொட்டு, மலர்... குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள். அரும்பு என்பது படிக்கத்தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்கத் தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்கத் தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது.

 

 இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும். ஆடல், பாடல், கதை சொல்லல்... தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.


இப்படியாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் கற்பிக்கப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை சீர்செய்து இருக்கிறதா?. 

 

2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் இலக்கு நிறைவேறி வருகிறதா? என்பது பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- மாணவர்கள் ஆர்வம் பிரேமா (ஆசிரியை திண்டுக்கல்):- எண்ணும், எழுத்தும் திட்டம் சிறந்த கற்பித்தல் முறை ஆகும். கொரோனா காலத்துக்கு பின்னர் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருவதற்கு இந்த திட்டமே காரணம். ஒவ்வொரு பாடத்தையும் துணை கருவிகள் கொண்டே நடத்துகிறோம். 

 

அதேபோல் பாடங்களுடன் தொடர்புடைய பொருட்களை செய்வதற்கு மாணவ-மாணவிகளை ஈடுபடுத்துகிறோம். இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் கற்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

மேகி (ஆசிரியை, திண்டுக்கல்):- மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரியும் வகையில் ஆடல், பாடலுடன் பாடங்களை நடத்துகிறோம். வகுப்பறை முழுவதும் உற்சாகம் பரவி விடுவதால் மாணவ-மாணவிகளும் பாடங்களில் கவனம் செலுத்துகின்றனர். எந்தவித சலிப்பும் இல்லாமல் பாடங்களை கற்கின்றனர். புத்தகத்தில் இருக்கும் பாடங்களை தவிர புதிய செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறோம். நன்றாக செயல்படும் மாணவர்களுக்கு கிரீடம், பதக்க அட்டை அணிவித்து பாராட்டுகிறோம்.

 

 இதனால் மாணவர்களின் ஆர்வமும் அதிகமாக உள்ளது. செயல்முறையில் பாடங்களை கற்பதால், எளிதில் மறப்பதில்லை. எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு இருக்கிறது. 

 

வாசிப்பு திறன் லட்சுமிநாராயணன் (பழனி) :- எனது மகன் நகராட்சி பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறான். தாய்மொழி தமிழில் வாசிப்பு என்பது முக்கியமானது. ஆனால் எனது மகன் தமிழ், ஆங்கிலத்தை வாசிக்க தடுமாறினான். 

 

அதை பள்ளி ஆசிரியர் கண்டறிந்து கூடுதல் கவனத்துடன் கற்பிக்கின்றனர். இதனால் தற்போது தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு திறன் மேம்பட்டு இருக்கிறது. அதோடு படிப்பிலும் ஆர்வமாக இருக்கிறான். குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் இதுபோன்ற திட்டங்களை மேலும் செயல்படுத்த வேண்டும்.

 

 சுகன்யா (ஆயக்குடி):- கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களின் வாசிப்பு திறன் மிகவும் குறைந்து போனது. அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டபோது மாணவர்களிடம் கற்றல் திறன் போதிய அளவில் இல்லை. எண்ணும், எழுத்தும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவதால் மாணவ-மாணவிகளின் வாசிப்பு திறன் நன்றாக இருக்கிறது. மேலும் படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Post a Comment

0Comments

Post a Comment (0)